நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Saturday 10 September 2011

விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 7




சாரா பாலின், அலாஸ்காவின் அழகுப் புயல், மாகாண அழகிப் போட்டியில் மூன்றாமிடத்தில் வந்தவர். படிக்கும் அன்பர்கள் படத்தைப் பார்த்து அவசரப்பட்டு விடாமல் இருக்க 1964ஆம் ஆண்டு பிறந்தவர் என்று ஜொள்ளிக் கொள்ளப்படுகிறது. அழகும், அரசியல் ஆசையும் சாரா பாலினை சின்னத்திரை நட்சத்திரமாக, மேயராக, மாகாண கவர்னராக இறுதியில் துணை ஜனாதிபாதி வேட்பாளர் வரை கொண்டு சென்றது.


சாரா பாலினின் யாஹூ மின்னஞ்சலை கையகப்படுத்துவதற்கு எந்தத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவில்லை. நேராக யாஹூ தளத்திற்குச் சென்று சாராவின் மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல் மறந்து விட்டது என்று சொல்லப்பட்டது. நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் யாஹூவின் நிரல்கள் வழக்கம் போல் மின்னஞ்சல் கணக்கின் ரகசியக் கேள்விகளைக் கேட்டன?. சாரா பாலின் 11-02-1964ல் பிறந்தவர் என்பதும், அவரது வீட்டு முகவரியின் அஞ்சல் எண்ணும், உயர்நிலைப்பள்ளியில் தன் கூடப்படித்த நண்பரையே திருமணம் செய்து கொண்டவரென்பதும் அலாஸ்காவின் அத்தனை பேருக்கும் அத்துப்படி. ஆனால் அவைகள் தான் மின்னஞ்சல் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு யாஹூவின் நிரல் கேட்ட கேள்விகள். வந்த வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் முடிக்கப்பட்டது.





அடுத்த சில நாட்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய மின்னஞ்சல்கள், மின்னஞ்சல் பக்கங்களின் திரைக்காட்சிகள் சந்தி சிரித்தன (மேலே உள்ள படங்களைக் க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்). அலாஸ்கா மாகாணத்தின் சட்டப்படி அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் அலுவல் ரீதியான தொடர்பாடல்களுக்குத் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் சாரா அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தார். அவை மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. அதைத் தவிர வேறெதுவும் கிளுகிளுப்பான சமாச்சாரங்கள் இல்லையா அல்லது இருந்தும் வெளியிடப்படவில்லையா என்பதெல்லாம் ஜுலியனுக்கே வெளிச்சம். ஜூலியனின் நோக்கமெல்லாம் அரசுத் துறைகளில் திரைமறைவில் இருக்கும் அவலங்களை வெளிச்சம் போடுவதிலேயே இருந்ததாலும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.


உடைக்கப்பட்டது சாரா பாலினின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியென்றாலும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர். பத்திரிக்கையாளர்களை அழைத்துக் குமுறி விட்டார், குமுறி. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ஜூலியனின் வெளியீடுகள் நடக்கும் போதெல்லாம் முதல் ஆவேசக் குரல் அலாஸ்காவிலிருந்து அக்காவின் குரல் தான். உச்சகட்டமாக மிகச் சமீபத்தில் "ஜூலியனைச் சுட்டுத் தள்ள வேண்டும்", "ஒரு தனிமனிதனை கட்டுப்படுத்த முடியாத ஆண்மையற்ற அரசாங்கம் ஆட்சியிலிருக்கிறது" என்றெல்லாம் சாம்பிராணி போட்டு புகைச்சலை அதிமாக்கி இன்று ஜூலியன் மீது நடந்து கொண்டிருக்கும் அப்பட்டமான அதிகாரவர்க்க வன்முறைகளுக்கு சாரா பாலினும், அவர் சார்ந்த குடியரசுக் கட்சியும் ஒரு காரணம்.


அமெரிக்க அரசாங்கம் சாரா பாலின் குறித்து கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் இருந்தது உண்மை. காரணம் ஊரெல்லாம் வளைய வரும் ஜூலியன், நாளை நம் மடியில் கை வைத்தால் என்ன செய்வது என்ற கவலைப் பட்டு தாடி வளர்த்துக் கொண்டிருந்தனர். கவலைப்படுவதோடு நின்று கொள்ளாமல் ஜூலியனை முழுமையாக சி.ஐ.ஏ உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. சுற்றிலும் நடப்பது குறித்து ஜூலியன் உணர்ந்தே இருந்தார். இது வரை ஜூலியன் நடத்திய அனைத்துப் பரிசோதனை முயற்சிகளுமே வெற்றியே. சட்ட ரீதியாக யாரும் அவரது சட்டையைக் கூடத் தொட முடியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறதென்றாலும் மனதுக்குள் ஜூலியனுக்கு ஒரு கவலை. காரணம், ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் "இதெல்லாம் எப்ப்டிண்ணே உங்களுக்கு மட்டும் சிக்குது" எனக் கேட்கும் போதெல்லாம், "அது ராமசாமி கொடுத்தது.... இது கந்தசாமி கொடுத்தது..." என்பதே வழக்கம்.


ஜூலியனின் சுழியை அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத் தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட ரீதியாகத் தன்னைப் பாதுகாக்கி 'விக்கி' எனும் இணையச் சித்தாந்தத்தினைக் கேடயமாக்குகிறார் என்றெல்லாம் குரலெழுப்பித் தங்கள் முகமும் ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் ஜூலியனும் சி.ஐ.ஏவும் பங்காளிகள், தங்களின் எதிரிகள் மீது திட்டமிட்டுத் தாக்குவதற்கு ஜூலியனைப் பகடைக்காயாக்குகிறது, அமெரிக்காவின் உளவுத்துறை என்று கூறி அமெரிக்காவின் சுப்பிரமணியசாமியாகினர்.இதற்கெல்லாம் ஜூலியனுக்குப் பதிலளிக்க நேரமில்லை. தனதுக் கடைசி விஷப்பரிட்சையாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையோடு லேசாக உரசிப் பார்த்து விட்டு, பின்பு முழுத் தாக்குதலையும் தொடங்கலாம் என்பது தான் அடுத்தகட்ட நகர்வு.

அத்திட்டம் ஜூலியன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒருசேரப் புறந்தள்ளியதுடன், அப்போது வெளிவந்த ஆவணம் உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இம்முறை தான் தங்கியிருந்து செயல்பட ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடு ஐஸ்லாந்து, முதல்முறையாக கூடவே இருந்து நடப்பதையெல்லாம் கண்டுகளிக்கப் பார்வையாளராக அமெரிக்காவின் நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். அப்பத்திரிக்கையாளரின் ஜூலியனுடான ஐஸ்லாந்து அனுபவங்கள் கட்டுரையாக வெளிவந்து மிகப்பெரியத் தாக்கத்தை உண்டு பண்ணியது, ஜூலியன் எதிர்பார்த்தது போலவே. அடுத்த பகுதியில் தொடரும்....


"தணிக்கை செய்வதென்பது, பயத்தின் வெளிப்பாடு" - ஜூலியன்.


பின்குறிப்பு: இன்று (செவ்வாய் 07-12-2010,)காலை லண்டன் போலீசாரிடம் ஜூலியன் சரணடைந்தார். அவரது சகல வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இரண்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டின் பேரில் ஸ்வீடன் அரசு அவரைக் கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடியதன் பேரில் நெருக்கடிக்குள்ளானார். விக்கீலீக்ஸ் முன்பைப் போலவே தொடர்ந்து செயல்படுமென்றும், ஸ்வீடனுக்குக் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் விக்கிலீக்ஸ் தளத்தின் செய்தித் தொடர்பாளர் க்றிஸ்டின் தெரிவித்துள்ளார். உண்மை சட்டத்தின் பிடியில் ... 

No comments:

Post a Comment

கருத்துக்கள்